Saturday, February 13, 2016

கொட்டுகிறேன் முத்தமாய்…….

ஒரு மென்மையான உறவிற்கு பெயர் காதல் என்று அறியும் வயதில்லை. அரைகால் சட்டையோடு காடு மேடு சுற்றத்தெரியும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,சுற்றித்திரியும் பம்பரமாய் விளையாடத்தெரியும், பொழுது போவது கூட தெரியாமல்..நகக்கண் பட்டு தோலுரிந்து ரத்தம் சொட்ட சொட்ட சண்டை போடத்தெரியும். அடுத்த நாள் நடக்கவிருக்கும் சாதாரண தேர்விற்கும் விழுந்து விழுந்து படிக்க தெரியும். வகுப்பில் இரண்டாம் மதிப்பெண் பெற்றபிறகும் பயப்பட தெரியும் அப்பாவின் மிரட்டல் கேள்விக்கு. சிதைந்து கிடக்கும் நோட்டுப்புத்தகங்களை எடுத்து, எழுதா பக்கங்களை கிழித்து, இந்தா வைத்துக்கொள் என்று நண்பனுக்காய் திருடனாவது பிடிக்கும். இப்படி இன்னும் கொத்து கொத்தாய் நினைவில் கொள்ளவும்,நெஞ்சில் புதைக்கவும் ஆயிரம் இருக்கிறது என்பதும் கூட தெரியும் அந்த பத்தாம் வகுப்பில்.

ஆனால் இவைகளைத்தாண்டியும் ஒன்று என்னுள் ஆழ பதிந்திருக்கிறது என்று தான், சரியாகத் தெரியவில்லை அப்பொழுது.. வா,போ என்று ஒற்றை வார்த்தையில் என்னை அழைக்கும் அவளைப்பற்றி ஒற்றை வார்த்தையில் கோர்த்து என்னுள் வைத்துகொள்ள முடியாது. அவளுக்காய் தனி வீடு இருந்த பொழுதும் என் வீட்டிலேயே கதியாய், என் அம்மாவிடமே வம்பு செய்ய பிறந்தவள் அவள். என்ன செய்கிறாய், படித்தாய இல்லையா, நானெல்லாம் படிச்சிட்டேன் என்று கூறியே பயமுறுத்தியவள்.

நெருங்கிய சொந்தாமாய் இருந்ததாலோ என்னவோ, அச்சமின்றி என்னோடும் என் குடும்பத்தோடும் கலந்தவள்.ஒன்றாம் வகுப்பு முதல், இந்த பத்தாம் வகுப்புவரை அவளோடு போட்டியிட்டுக்கொண்டே என்னை வகுப்பின் முதல் ஆளாக்க முயற்சித்தவள். அத்தகைய தருணங்களில் எல்லாம் “ச்சீ போ வந்துட்டா அட்வைஸ் பண்ண” என்ற வார்த்தைகளை எறிந்திருக்கிறேன் அவள் மேல்.

சரியாகத் தெரியவில்லை எப்பொழுதிலிருந்து என்று, ஆனால் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்விற்கு பிறகு, ஓரிருவாரங்கள் கழிந்து, மொத்தமாய் மாறியிருந்தோம் உடலவிலும் சரி மனதளவிலும் சரி. அதே கேலிப்பேச்சு, சண்டை, அன்பு, நட்பு,இப்படி அன்றாட நிகழ்வுகள் தான், இருந்தும் எதோ ஒன்று புதிதாய் என்னுள்ளும், அவளுக்குள்ளும்.. அக்கறை அதிகமாய் எடுத்துக்கொண்டாள், கோபமாய் சண்டையிட்ட பொழுதும் ஏதோ ஒன்று, இன்னும் வேண்டும் என்றது.கிட்டத்தட்ட எதோ ஒரு உணர்வு இருவரையும் நெருக்கமாக்க முயற்சித்தது, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்களை பார்த்து அந்த உணர்விற்கு “காதல்” என்று பெயர் வைத்துகொண்டோம்.அடித்து பிடித்து சண்டை போட்ட காலங்களில் தோன்றாதது,வெறும் பார்வைக்கே ஏதோ செய்தது அப்பொழுது. உடல்கள் ஏதோ ஏதோ பேசிக்கொண்டிருந்திருக்கலாம், ஆனால் உணர்வுகள் ஏதோ ஒன்றை மட்டுமே திரும்ப திரும்ப எதிர்பார்த்துக்கொண்டிருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

கிட்டத்தட்ட அவள்மீது நானும், என்மீது அவளும் கிருக்காகிப்போகினோம் என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தோம், அவள் முகம் என்னுள் மெல்ல அழுத்தமாய் பதிய ஆரம்பித்தது. அவள் மீதான எண்ணங்கள் மெதுவாய் என்னுள் நிரந்தரமாய் படிய ஆரம்பித்தது. அவளை மீண்டும் காண்பதற்காய் எனது இரவுகள் விடிய ஆரம்பித்தது ஒவ்வொரு முறையும். என்மீதான அவள் சுண்டுவிரல் தீண்டல்கள் கூட என்னுள் அழுத்தமான சுவடுகளாய் பதிய ஆரம்பித்தது. எனக்கும் அவளுக்குமான உரையாடலின் பொழுது யார் அருகில் இருந்தாலும் கவலைப்படாத நாட்களை தாண்டி, யாருமருகிலில்லாத நேரங்கள் வேண்டும் என்று ஏங்கும் நாட்களை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணரும் தருணத்தில் உடல் முழுவதும் ஒருவித பயம் ஒட்டி இருந்த பொழுதும், அதை இன்னும் அதிகமாய் எதிர்பார்த்தோம் என்பதே உண்மை.

எதோ போகிக்கொண்டிருந்த வாழ்க்கையை திடீரென மொத்தமாய் புரட்டிபோட்டாள் தலைகீழாய். அன்று பள்ளி நடந்துசெல்ல,பட்டென்று கரம்பிடித்து, ஐ லவ் யு என்றாள். அடுத்த கணம் என்னிடம் இருந்தும் பதில் ஐ லவ் யு என்று. பிறகென்ன சரி தவறு என்று யோசிக்க எதுவும் இல்லை, அவளைப்பற்றிய எனது உணர்வுக்கு பெயர் தான் “காதல் ” என்று எப்பொழுதே என்னுள் விதைத்து வைத்திருக்கிறேனே!!!!.அந்த கனத்திற்கு பிறகும் அவளது ஒவ்வொரு செயலிலும் புது புது அர்த்தங்கள். இந்த அர்த்தங்கள் எனக்கு மட்டும் புரிந்ததாய் உணர்ந்தேன். எங்களது காலத்தை கடந்தவர்கள் அல்லவா எங்களது பெற்றோர்கள், மெதுவாய் பிரித்துவைக்கப்பட்டோம், எல்லைகள் இடப்பட்டே விடப்பட்டோம். என்ன உணர்வுகள் என்று உணரும் தருணத்தில் எத்தனை அணைக்கட்டு போட்டாலும் நின்றுவிடாது என்பதை உணர்ந்தோம்.

மென்மையான தொடல், உனக்காய் நான் எப்போழுதுமிருக்கிறேன் என்பதான அழகிய முத்தம், இவை ஒவ்வொன்றும் ரகசியமாய் எங்களுக்குள் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தது, ஒரு ஆணும் பெண்ணும், உனக்காய் உயிரை கொடுப்பதை தாண்டியும்,உனக்கென கொடுக்க ஒன்று இருக்கிறதென்று அவர்கள் உணரும் தருணத்தில், அந்த ஒன்று கற்பை தவிர புனிதமான ஒன்று வேறென்ன இருக்க முடியும் இவ்வுலகத்தில். நான், நீயாகி விட தயார் என்ற கணத்தில், என் உடல் உன்னுடன் ஒப்படைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் அத்தனை உலகம் அல்லவா இருக்கிறது. நினைவு தெரிந்து உடைகளுக்கு மட்டுமே தன் உடல்காட்டிய உயிர், இன்னொரு உயிர்க்கு தன் உடல் காட்ட சம்மதிக்கும், எப்பொழுது முழுதாய் நேசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே இது சாத்தியம்.

இந்த சாத்தியம் எங்களுக்குள் நிகழ முயற்சித்தது இன்று. எப்பொழுது உள்மனது பயப்படுகிறதோ அப்பொழுது தவறு செய்கிறோம் என்றே அர்த்தம் என்பதை உணர்ந்தவனாய்,பயத்தில் மெல்ல முயற்சிக்க. பளாரென்று கன்னத்தில் அரை விழுந்தது அம்மாவிடமிருந்து. அழுதுகொண்டே நிற்க, காதைபிடித்து இழுத்து அறையில் தள்ளி, கம்பி காயவைத்தாள்.சிறிது நேரத்தில் வந்து கதவை திறந்து மனதை கல்லாக்கி கொண்டு எனது கணுக்காலில் வைக்க..அத்தனை வலியோடு கத்தினேன்.

என் கனவு களைந்து போகும் அளவிற்கு கத்திஇருக்கிறேன். கண்களை உருட்டி பார்க்கிறேன் கடிகாரத்தை நேரம் அதிகாலை ஐந்து மணி, இருபத்திரண்டு நிமிடம்.நாள் ஏப்ரல் 30 – 2015. அட கடவுளே இத்தனையும் கனவா, சத்தியமாய் நம்ப முடியவில்லை.என்னடா காதல் எல்லாம் பண்ணினோம் ,அப்போ அந்த பொண்ணுகூட கனவா!!!!!. இல்லை எங்கோ பார்த்த முகமல்லவா அந்த முகம். நன்றாய் நினைவுபடுத்தமுயற்சிக்கிறேன். நினைவுக்கு வர, வேகமாய் எழுந்து என் வீட்டின் இன்னொரு படுக்கையறைக்கு ஓடுகிறேன்.

அழுது தடம் பதிந்த முகத்தோடு உறங்கிக்கொண்டிருக்கும் என் மணைவியை உற்றுநோக்க,அதே முகம்..காதலை நெஞ்சுள் வைத்து என்ன புண்ணியம், இப்படி கனவாய் மட்டும் வரும், பிறகு கலைந்தும் போகும்.கோபம் காட்டி சுக்கு நூறாய் அல்லவா உடைத்துபோட்டு இருக்கிறேன் அவளை. பணம் தேடல்,புகழ் தேடல், பொருள் தேடல் இவைகளில் கிடைக்காத ஒரு சந்தோசம் இருக்கிறதென்றால் அது உருகி உருகி காதலிக்கும் காதலை தவிர சத்தியமாய் வேறொன்றுமில்லை என்பதை பதியவைத்துவிட்டேன் என்னுள். அவள் கன்னத்தில் சுவடு பதித்த கண்ணீர் தடையங்களை மெதுவாய் அழிக்க ஆரம்பிக்குறேன்.

அவளை உள்ளுள் மட்டுமே நேசிக்கும் எனது காதலை முதல் முறை பகிங்கிரமாய் ஒப்புக்கொண்டு அவள் கன்னத்தில் கொட்டுகிறேன் மொத்தமாய், முத்தமாய்…….

0 comments:

Post a Comment