Saturday, February 13, 2016

கனவே இன்னும் ஒருமுறை...



இன்று ரிமோட்டில் விளையாடும் காரை எனது வீட்டின் முன்பு உள்ள சிமெண்ட் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தேன். அதிவேகமாய் இயக்க பிடிக்கும் என்பதால் அத்தனை வேகமாய் ஓட்டிக்கொண்டிருக்க, திடீரென சாலையோர சாக்கடையில் விழ, காரை அவ்வளவு பிடிக்கும் என்பதால் சற்றும் யோசிக்காமல் முழுவதுமாய் மூழ்குவதர்க்குள் ஓடிச்சென்று சாக்கடைக்குள் கைவிட்டு எடுக்கும் கணம் வேகமாய் ஒரு டிவிஎஸ் வண்டி என்முன் வந்து நிற்க, நிமிர்ந்து பார்க்கிறேன்.

வெள்ளை சட்டை, வெள்ளை வேஸ்ட்டி,முறுக்கி நிற்கும் கம்பீர மீசை , ஆனால் பார்வையில் சாந்தம். என் அப்பாவே தான். 'குமாரு அங்க என்னடா பண்ற, என்னடா கையெல்லாம் சாக்கடை தண்ணி, இங்க வா' என்று கூறி முடிப்பதற்குள், ஓடிச்சென்று அப்பாவை அப்படி இருக்கியணைத்து, நல்லா இருக்கீங்களாப்பா?, எங்கப்பா இருந்தீங்க?, ஏன்ப்பா இளைச்சுட்டீங்க? என ஆயிரம் கேள்வி அவர் முன் வைக்க, அவ்வளவு பக்குவமாய் பதில் சொல்கிறார்.'அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்ல, இப்ப தான் அப்பா காயம் சரி ஆகுச்சு குமாரு' என்று கூறிக்கொண்டே அவரது வெள்ளை வேஸ்ட்டியில் எனது கையை துடைத்துவிட்டார்.

அப்பா வாங்க போலாம் வீட்டுக்கு, அம்மா, குட்டி எல்லாம் உங்கள காணாம அழறாங்க என்று கூறிக்கொண்டே அவரை இழுத்து வண்டியில் அமர்த்த முயற்சிக்கையில், சிரித்துக்கொண்டே கூறுகிறார். 'உன் அம்மா திட்டுவாளே டா நான் வீட்டுக்கு வந்தா, இவ்வளவு நாளா எங்க போன குமாரு' அப்டின்னு....
'இல்ல அப்பா, அம்மா திட்ட மாட்டாங்க,நீங்க இல்லாத இந்த நாட்களில் ரொம்ப அழுது மனமுடைந்து இருக்காங்க, வாங்க போகலாம் சீக்கிரம் என அவசரப்படுத்த, வண்டியில் அமர்ந்து வீடு நோக்கி பயணித்தோம்.. சீக்கிரம் போங்கப்பா, இன்னும் வேகமா போங்க, நான் அம்மாகிட்ட உங்கள காட்டனும் என வேகப்படுத்த, 'நிதானமாய் தான் குமாரு போகணும் எப்பவும், சரியா!!, வேகம் எப்பவும் தப்புடா' என கூறிக்கொண்டே வண்டியை மெதுவாய் ஓட்டுகிறார்.'அப்பா, நான் என் ஆபீஸ்ல வொர்க் பண்றவங்க கிட்ட சொல்லணும், உங்களுக்கு ஒன்னும் ஆகல நீங்க வந்துட்டீங்கன்னு' என கூறிக்கொண்டே வருகிறேன்.அவ்வளவு அழகாய் சிரித்துக்கொண்டே வருகிறார். 'சரி குமாரு ' என தலையசைத்துக்கொண்டே..

படாரென கண்ணில் ஏதோ பூச்சியடிக்க, கலங்கிய கண்களை மூடி, வலியில் மெதுவாய் கண்திறந்தேன். எனது அறைக்காற்றாடி வேகமாய் சுழல,அறைமுழுவதும் இருட்டியிருக்க.கொஞ்சம் கொஞ்சமாய் நிஜம் உடைய உடைய, இத்தணையும் கனவு என மனம் உணர உணர உள்ளம் உடைந்து வெடித்து அழத்தொடங்கினேன். அப்பா விபத்தில் இறந்தது தான் உண்மை,நம்மிடம் இல்லை, அவரைத்தொட்டு பாசம் உதிர்க்க இயலாது என உணர உணர வெடித்து அழத்தொடங்கினேன். 

அப்பா என்பது இன்னொருஉயிரல்ல, மகன்களிடமிருந்து என்றும் பிரித்தறிய முடியா உயிரே.தேம்பி தேம்பி அழுகிறேன், 'உன்னை தொலைத்துவிட்டேனே அப்பா'. இனி உன்னை எங்கு கண்டெடுக்க!!!!! ..அப்பா என்பது துளியும் அசைத்துப்பார்த்திட முடியா ஒரு உறவு. அப்பாவை இழந்த மகன்களே எப்படியப்பா கடக்குறீர்கள் அப்பாவை நினைவுபடுத்தும் தருணங்களை?.சத்தமில்லாமல் மனதினில் வெடித்து அழுது கடந்து போவீர்கள் என உணர்கிறேன் இப்பொழுது ... கடினமாய் இருந்தாலும் அழுகையோடே தூங்க முயற்சிக்குறேன். பிறகெப்படியப்பா உன்னைக்கட்டிபிடித்து பேசுவேன், கனவைத்தவிர, இந்த வரம் வேறெங்கு கிடைக்கும் இனி,. கனவே இன்னும் ஒருமுறை... 

0 comments:

Post a Comment