Saturday, February 13, 2016

தாயே உனக்கொரு கடிதம்....

இந்நாளில் உனை நினையாமல் யாரை நினையேன் . இவ்வுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய உனை நினையாமல் பிறகு வேறுயார்..பத்து திங்கள் என்னை சுமந்து, தினம்தினம் மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல் அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகளை செய்துகொண்டு, என்னைசுமந்து கொண்டு எப்படி எல்லாம் சிரமப்பட்டு இருப்பாய். நீ என்னை சுமையாய் கூட உணர்ந்திருக்க மாட்டாய்.உள்ளம் உவகையுற்று காத்திருந்திருப்பாய் எனைக்காண. 

உன் வாழ்க்கை போர்க்களத்தில் என்னை ஒருகையில் ஏந்திக்கொண்டு, இன்னொரு கையில் நம்பிக்கை என்னும் வாளை ஏந்திக்கொண்டு அத்தனை இன்னல்களையும் வெட்டி வீழ்த்தினாய்.இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாய் நாங்கள் சிறுபிள்ளைகளென்றே,அதனாலோ என்னவோ எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று ஒவ்வொரு செயலிலும் எங்கள் முன் செல்கிறாய்.

அதீதமான நாட்களில் உன் கைகளை உதறிவிட்டு நான் வளர்ந்ததை உனக்கு நிரூபிக்க முயற்சித்து உன் கோபத்தை சம்பாதித்து இருக்கிறேன். அதனாலென்ன அம்மாவிடம் தோற்பதை விட ஆனந்தம் வேறெதில்.இன்றும் உழைத்துக்கொண்டு இருக்கிறாய் உன் உழைப்பில் மட்டுமே நிற்க வேண்டுமென.நீண்ட காலமாய் வாழ்க்கை கடலில் மிதந்து கொண்டிருக்கிறாய் எங்களை கரை சேர்க்கும் கட்டுமரமாய். நாங்கள் கரை சேர்ந்துவிட்டோம்.உனக்காக காத்து இருக்கிறோம், மிதந்துகொண்டிருப்பதே எனது வாழ்க்கை என இன்னும் உழைத்துக்கொண்டே இருக்கிறாய்..நீ எங்கள் நிழலில் இளைப்பாற ஏங்கிகொண்டிருக்கிறோம்..

எப்பொழுதெல்லாம் உடைந்து தனியாய் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் திரும்பிப்பார்ப்பேன், உயர்ந்து அசாத்தியமாய் நின்று கொண்டு, ம்ம்ம் செல் நாங்கள் நிற்கிறோம் என்று என்னுள் ஒரு அசைக்கமுடியா தைரியமாய் நிற்கும் உன்னையும்,அப்பாவையும் பார்த்துவிட்டு நடைபோடுவேன். அதில் ஒரு ஆசாத்தியமாகிய அப்பாவை இழந்துவிட்டேன் வேரோடு.. இப்பொழுதெல்லாம் தைரியத்தை தாண்டி என்னோடு உன்னை அழைத்து செல்லவே ஆசைப்படுகிறேன் அன்னையே..

எனக்காக என்னோடு நடை போடு அன்னையே, உன்னை அருகில் வைத்து உனை சுமக்க ஏங்குகிறேன்.ஒரு வரம் வேண்டும் இனிவரும் நாட்களில் நான் தாயாய் என் இறகில் உன்னை காத்திட...

0 comments:

Post a Comment