Saturday, February 13, 2016

உன் வாசனையில் சில நாழிகை... -1


 


படித்த படிப்புக்கு அடையாளம் தேட சென்னை வருகிறேன் முதன்முறை. "கோயம்பேடு வந்தாச்சு எல்லோரும் இறங்குங்க,இதுதான் கடைசி ஸ்டாப்" என்று பேருந்து நடத்துனர் கூறி முடிக்கும்பொழுது, ஆம் இது தான் எனக்கும் கடைசி நிறுத்தம், இதில் வென்றாகவேண்டும், எனக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்பதை மனதில் அமர்த்திக்கொண்டு நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன் திருவெல்லிக்கேணி செல்லும் பேருந்தை நோக்கி.....

தேடிப்பிடித்து தங்கும் வீட்டை அடைவதற்குள் நண்பன் வந்து கூட்டிசென்றான் நான் இருந்து சாதிக்க வேண்டிய அந்த அறைக்கு. கொஞ்சம் ஓய்வு, பின் உணவு , பின் படித்த பாடங்களை புரட்டிப்பார்ப்பது, சில வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு முயற்சிகள் என்று நாட்கள் கடந்தது.கடிவாளம் இட்ட குதிரையாய் அந்த ஒற்றை அறையையும், நேர்முகத்தேர்வு இடங்களையும் சுற்றி சுற்றி வந்தேன்.மெல்ல இந்த நகரமும், இந்த மக்களும் பழக்கப் பட ஆரம்பித்தார்கள். நண்பர்கள் ஆறு பேர்கள் சுற்றி இருந்தாலும் ஒரு வெறுமை, மெதுவாய் வாழ்க்கை கசக்கத் தொடங்கியது தொடர் தோல்விகளால்.நம்பிக்கை சிறிது சிறிதாய் உடையத் தொடங்கியது.

என் கடிவாள வாழ்க்கை, என்றாவது உடையும் என்று நம்பிக்கையிலிருந்த எனக்கு, அந்த நாள் வெகு அருகாமையில் இருக்கிறது  என நான் அறிந்திருக்கவில்லை. ஒரு அதிகாலை, என்னை ஒரு நிறுவனத்தின் வாசலில் நிறுத்தியது ஒரு நேர்முகத்தேர்வுக்காய்.வந்திருந்த அனைவரும் அமர்த்தப்பட்டோம் ஒரு அறையில். எங்கும் அதிகம் பேசிப்பழகாதவன் என்பதால் உதடுகளுக்கு பதில், கண்களை அதிகம் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உற்று நோக்கியே பழகியவன்.அவ்வளவு நிசப்தம் நிலவியது அந்த அறையில்.ஒவ்வொருத்தனின் எதிர்கால வாழ்க்கையும் அந்த அறையில் அத்தனை நிசப்தமாய் சத்தமிட்டுக்கொண்டிருந்தது ஒவ்வொருவனின் உள்ளுள் மட்டுமே.

என் அருகில் அமர்ந்து இருந்தவன் பட்டென்று உடைத்தான் நீங்க எந்த ஊரு பாஸ் என்று, நான் நாமக்கல் என்றேன்.நான் ஜெயம்கொண்டம் என்று முடித்தான்.எழுத்துத்தேர்வு நடந்துமுடிந்தது.முடிவுக்கு காத்திருந்தோம். விஜய் என்று எனது பெயரை வாசிக்க, அத்தனை பல்லும் சிந்திவிடும் அளவுக்கு நீளப்புன்னகை.நாளை நேர்முகத்தேர்வு என கூறிவிட்டு அனுப்பினார்கள்.மெதுவாய் நடக்க ஆரம்பித்தேன் சந்தோசத்தில்.. விஜய்" என்று முதன் முறை சென்னையில் ஒரு பெண் குரல் அழைக்க, சற்று சந்தேகத்தில் திரும்ப்பிப்பார்க்கிறேன்.

படிய சீவி வகுந்தெடுத்த கூந்தல்,புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்திராமல் தடுத்து நிறுத்தும் கருமை நிற பொட்டு,அதிகம் அலங்காரம் இல்லாத, என் கிராமத்து சாயல் அதிகம் ஒட்டியிருக்கும் முகம். பார்த்த மாத்திரத்தில் அட நம்ம ஊரு பொண்ணு என சினிமா ஹீரோக்கள் சொல்லும் அதே வசனம் என்னுள் கேட்க. என்னைய நிச்சயமா இருக்காது என சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தேன். முதல் முறை பேசுகிறாள் "தப்பா எடுத்துக்காதீங்க" என்று ஆரம்பித்தாள். நான் பேச ஆரம்பிப்பதற்குள்,நீங்கள் நாமக்கல் அப்டின்னு கேள்விப்பட்டேன் அப்படியா? என்றாள். "ஆம்" என்று கூறி முடிப்பதற்குள் நானும் தான் என்றாள்.அதற்கடுத்து அவளிடமும் என்னிடமும் கேள்விகள்  இல்லை. ஒருவர் மாறி ஒருவர் தலைகவிழ்ந்து கொண்டே,கடைசிவரை பேசவில்லை. சரி பார்ப்போம் என இருவரும் வேறு வேறு திசையில் நடைகட்ட ஆரம்பித்தோம்.

மறுநாள் அடுத்தகட்ட நேர்முகத்தேர்விற்கு அதே நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு காத்திருக்கிறேன் முடிவிற்காய்.சிறிதுநேரத்தில் இன்னொரு அறையிருந்து வந்து அமர்கிறாள். என்னை நோக்கிய அடுத்தநிமிடத்தில் அத்தனை புன்னகையோடு, முடிஞ்சுதா விஜய் ? என்றாள். உள்ளுள் ஏதோ ஏதோ பேச தோன்றுகிறது, அவள் கண்ணைப் பார்த்து அவள் பெயரை கேட்பதற்கு வராத தைரியத்தை எந்த கடையில் வாங்குவது?.பேசாமல் இருப்பதே மேல் என அமைதியாகிவிட்டேன். இதற்கு மேல் அவளிடமும் என்னிடமும் கேள்விகள் இல்லை. நிசப்தமாய் அமர்ந்திருந்தோம். "விஜய், HR will get back you , now you can  leave  " என நிறுவன அதிகாரி கூறிமுடிக்க.. ஓங்கி அறைந்தது போல் இருந்தது. படாரென கிளம்பிவிட்டேன் இடத்தை விட்டு.ஒரு பத்து அடி கிளம்பி இருப்பேன். விஜய் என அதே குரல்,திரும்பிப்பார்க்க அதே அவள். "என்னையும் கிளம்ப சொல்லிட்டாங்க". என்று கூறி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கியிருந்தது."சரி விடுங்க அடுத்தத பார்ப்போம் ",என்று நான் முடிப்பதற்குள்,வேறு ஏதாவது interview இருந்தா எனக்கு update பண்றீங்களா ப்ளீஸ் என்றாள்.

சரிங்க என்று கூறிவிட்டு நடை கட்டினேன். உங்க நம்பர் சொல்லுங்க நான் ஏதாவது இருந்தா update பண்றேன்.முதல் முறை ஒரு பெண் நம்பர் கேட்கிறாள். என் மீதான அவள் நம்பிக்கை, என்னுள் எனக்கான மதிப்பை கூட்டியது. பேருந்தில் அமர்ந்தது மட்டும் தான் தெரியும், என் மீதான அவளின் நம்பிக்கை என்னை ஏதேதோ செய்துகொண்டிருந்தது. எனக்கும் ஒரு பெண் நட்பில் இருக்கிறாள் என்பதை கூறி பெருமை கொள்ளும் சாதாரண மனிதனில் தான் நானும் இருக்கிறேன்.


எனக்கு எப்படியும் அவள் நம்பரை கேட்கும் தைரியம் இருக்காது என்பதை புரிந்தவளாய்,அவளது நம்பரை என்னிடம் கூறிவிட்டு,தமயந்தி என save பண்ணிக்கோங்க என்றாள். உள்ளுள் உணர்வுகள் உயிர்பெற்றது போன்றதொரு அத்தனை ஆனந்தம் என்னுள்.எப்பொழுதெல்லாம் நேர்முகத்தேர்விருக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு குறுந்தகவல் அவளிற்கு. அதற்குமேல் அனுப்ப முடியா வண்ணம் எனது  பொருளாதாரம் வீழ்ச்சியிளிருக்கும். 50 பைசா ஒரு குருந்தகவளிற்கு,அப்பொழுதெல்லாம் அப்பா அனுப்பும் பணத்தை பத்திரப்படுத்ததுவதுதான் அப்பொழுதைய முதல் வேலை,பிறகு தான் மற்றவை எல்லாம்...

இப்படி ஒவ்வொரு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திலும்,ஹாய்  என்ற சாங்கிய சம்பிரதாய நிகழ்வுகள்,அப்புறம் மறுபடியும் நேர்முகத்தேர்வு தோல்விகள் என்று ஓடிக்கொண்டிருந்தது.அவள் எனக்கு அதிகம் பழக்கப்பட்டவள் ஆகிவிட்டாள்,ஹாய்,எப்படி பண்ணி இருக்கீங்க interview ?,விடுங்க அடுத்த interview ல பார்த்துக்கலாம்,ஏதாவது interview இருந்தா நிச்சயம் அனுப்புறேன் " இந்த வட்டத்தில் மட்டுமே சுழன்றோம்.

ஒருநாள்  ஒரு நிறுவனத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறோம்,"இது தான் நான் முயற்சி செய்கிற கடைசி interview என்றாள்" ..பட படவென ஆயிரம் கேள்விகள் கேட்க தோன்றுகிறது ஏன்?,எதற்காக?, கிடைக்கும், முயற்சி பண்ணுங்க, என்றெல்லாம் சொல்ல தோன்றுகிறது. சாதாரண வார்த்தைகளையே என்னால் பேச இயலாது இதில் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் எங்கே?.. மௌனமாய் முதல் முறை அவள் கண்களை பார்த்து பேச முயற்சிக்குறேன்,அவளின் கலங்கிய கண்ணில் எதைப் பேச,
சற்று நேரம் வார்த்தைகளற்று அனாதையாய் விடப்பெற்றேன்...

நான் எதையும் கேட்க மாட்டேன் என்ற புரிந்ததாலோ என்னவோ,முதல் முறை சாங்கிய சம்பிரதாய வார்த்தைகளை தாண்டி பேச ஆரம்பிக்குறாள்."நான் காலேஜ் முடிச்சதும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, வேலைக்கு போகணும்,உங்களுக்கு ஏதாவது சேர்த்து வைக்கணும் என எவ்வளவு கூறினாலும் சமாதானம் ஆகாத என் பெற்றோரிடம் கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு இங்கு வந்து இறங்கினேன்,தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.இப்பொழுது அவர்களுக்கான நேரம்,அதனால் கிளம்புகிறேன் என்கிறாள். interview முடிச்சிட்டு நேரம் இருந்தா பார்க்கலாம்.,சரி விஜய் பார்க்கலாம் என்று கூறி முடிக்கும்பொழுது அவளது கண்களில் கண்ணீர் படர்ந்திருந்தது..

நேர்முகத்தேர்வு முடித்துவிட்டு காத்திருக்கிறேன் அவளுக்காய். காணவில்லை. ஏதோ ஒரு உணர்வில் இதயம் பட படக்க ஆரம்பிக்கிறது அவள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விஜய் you will get offer letter with in 4 days you can check your mail .என்று நிறுவனம் என்னிடம் கூற திகைத்துப்போனேன்.அத்தனை கர்வத்துடன் புன்னகைத்துவிட்டு,வேகமாய் வெளியில் சென்று தமயந்திக்கு கூற முயற்சிக்குறேன். switched off செய்யப்பட்டுள்ளது என்ற வாசகத்தை கேட்க கேட்க வியர்த்துக்கொட்டுகிறது. ஒரு அரைமணி நேர முற்சிக்குப்பிறக்கும் தோல்வியே. குடும்பத்தில் ஆரம்பித்து, சொந்தம், நட்பு வட்டாரங்கள் என அனைத்திற்கும் வேலைகிடைத்ததை பகிர்ந்த பிறகும் கூட இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு வெற்றிடம். தொடர்ந்து முயற்சித்தேன் அவளிற்கு ,மீண்டும் தோல்வியே.

என்ன நடந்தது அடுத்த பதிவில் பகிர்கிறேன்

0 comments:

Post a Comment