Friday, January 31, 2014

உன்னிடம் பேச….


இந்த இயற்கையின் மிகப்பெரிய பிரம்மிக்கும் நிகழ்வுகளில் ஒன்றான ரசாயன உணர்வுகள் இவ்வுலகத்தில் யாரையும் விட்டுவைத்ததில்லை, நான் மட்டும் விதி விலக்கா என்ன?. அதைத்தான் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

நிறுவனத்தில் நான் அமர்ந்து குறைந்தது நான்கு வருடங்களை தாண்டி இருக்கும் என எண்ணுகிறேன். இந்த கால கட்டங்களில் எனக்கு அருகேயான இருக்கையில் பல நபர்களை கடந்து இருக்கிறேன். சில பெண்கள்,சில ஆண்கள். ஆனால் பிரம்மிக்க வைக்கும் நபரை கண்டதில்லை என்று சொல்ல முடியும் இந்த இரண்டு நாளைகளுக்கு முன்பு வரை, ஆனால் இப்பொழுது…

கடந்த ஒரு வாரகாலமாக சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அந்த இருக்கைகாய் தினம் தினம் போட்டிகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அன்றும் அப்படி தான், கடிகார முள் 11 ஐ தொட்டு கொண்டு இருந்து இருக்கும் என நினைகிறேன். திடீரென என்னை கடந்து சென்று அமர்ந்தாள் அதே இருக்கையில்.

சில நூறு நபர்களை நான் அந்த இருக்கையில் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு வருகையும் ஏதோ ஒன்று செய்யும் தானே நம்முள். அப்படித்தான் என்னுள்ளும் நிகழ்ந்தது.

மெதுவாய் கவனிக்கத் தொடங்கினேன் அவளை. என்னிடம் எப்பொழுதாவது பேசுவாள் என்றால் நிச்சயம் நான் நிமிர்ந்து தான் பேச வேண்டும் அவ்வளவு மிககச்சிதமான உயரம். பெயர் என்னவாய் இருக்கும், கொஞ்சம் சாய்ந்தும், நிமிர்ந்தும், காணதது போல் கண்டத்தில் “சுபத்ரா” என்றிருந்தது. நல்ல அழகிய பெயர் சுபம் உண்டாகட்டும் என்று வாழ்த்துவது போல்.

சடாரென்று திரும்பினாள் என்பக்கம், ஏதோ பேச வந்தாள் என்னிடம், பிரம்மித்து போய்விட்டேன். அத்தனை அழகு, அத்தனை அழகில் திரியும் திமிரை அழகிய நெற்றிப்பொட்டின் வழியாக சரிசெய்துவிட்டாள் ஒற்றை கருப்பு நிற சாந்துபொட்டில். ஒற்றைக்கேள்விக்கே பதிலளிக்க தடுமாறுபவன் நான், இதில் ரெட்டை கேள்விகள் கண்களிலிருந்தும் , உதடுகளிலிருந்தும் ஒரே நேரத்தில்.. என்ன செய்ய?. அத்தனை வார்த்தைகள் பேசுகின்றன அவள் கண்கள் உதடுகளை விட..

என் இதயம் பேசதுடித்தும், இதழ்கள் பேச தடுமாறின. அதற்குள்

Excuse me, any help?. I am siva, U?

முந்திகிட்டாப்ள நம்ம உயிர் தோழன். ஏனெனில் இவனோடு தான் இந்த நான்கு வருடமும் குப்பைகொட்டுகிறேன். சரி இந்த பொண்ணோட நட்பும் இவனுக்கு தான் போல இருக்கு என தலைகுனிந்த எனக்கு, ஆச்சர்யம் காத்து இருந்தது.

“No thanks.”

பட்டுன்னு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி பதில். கொஞ்சம் வித்தியாசமான பொண்ணு தான். தேவை எனில் கேட்கிறேன் என்று அளவான பேச்சு. நிச்சயம் அசத்திவிட்டாள் என்னை. திடீரென என்பக்கம் திரும்பினாள்.அத்தனை சந்தோசம் ஏதோதோ பேசினாள். யார் கவனித்தார்?.. பேசும் அழகையே கண்டுகொண்டு அவள் பேசியதை மறந்துவிட்டேன். தள்ளி நின்றே பேசினாள்.

சிறிதுநேரத்தில் கிளம்பிவிட்டாள் மதிய உணவிற்கு. காத்திருந்தேன் ஒரு முடிவோடு.சிறிது நேரத்தில் திரும்பினாள். மீண்டும் அவளையே உற்றுநோக்க தொடங்கிவிட்டேன் கண்டும் காணதது போல். இடையிடையே என்னிடம் எதோ கேட்க வருவாள் பிறகு அவளது கைப்பேசியில் உரையாடுவாள். கவனிக்க தொடங்கினேன் காதுகொடுத்து. அத்தணை வார்த்தையிலும் தெளிவு, கண்ணியம்.

மரியாதை கொடுத்தே பேசினாள் கைப்பேசியில் பேசும் போதும்கூட. எதிர்முனை கோபத்திற்கு கூட அன்பையே உதிர்த்தாள். பேசி முடிக்கும் போதும் உதிர்க்கும் புன்னகையில் அனைத்தும் மறந்து கவனித்துகொண்டிருந்தேன். அவ்வப்பொழுது ஒரு எண்ணம் என்னை குடைந்து கொண்டே இருந்தது. அழகிலும், நெத்திபொட்டு தெளிவான பேச்சிலும், நேர்த்தியான உடையிலும், அழகிய புன்னகையிலும், மரியாதையிலும், கண்ணியமான குணத்திலும் தெளிவாய் நிற்கும் பொண்ணுக்கு யாரவது பின்னாடி நிற்காமலா, காத்திருக்காமல இருப்பார்கள்????.

எப்படியாவது பேசி விட வேண்டும் மிக விரைவில், அதுவும் மிக அருகில் நெருக்கமாய் முகத்திற்கு அருகில் சென்று.. இது சராசரியான ஆசை தானே , தவறா சரியா என்று ஆராய்ந்து பார்க்க நேரமில்லை. எதிர்பார்த்தது போலவே எனது பக்கம் திரும்பி நெருங்கினாள். ஆசையாய் காத்திருந்த எனக்கு மீண்டும் எதிரி என் நண்பனே.

“Forget to inform that u have been asked to report at mepz from tomorrow onwards.”

நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள்.கடவுளை வேண்டிக்கொண்டு ஒருமுறை ஒருமுறை என்ற நிமிடத்தில் என் அருகே வந்தாள். அத்தணை சந்தோசம்.

என்னைத்தொட்டு என் முகமருகே இன்னும் நெருக்கமாய் நெருங்கி பேச ஆரம்பித்தாள். அத்தணை அருகில் அவள் முகத்தையும் கண்ணியம் பேசும் இதழையும் பார்க்க ஆரம்பித்தேன், ரசித்துக்கொண்டே.

“அம்மா நான் கிளம்பிவிட்டேன், வந்துவிடுவேன் “. இது என் office vnet நம்பர்.



0 comments:

Post a Comment